சென்னை: தி.நகரை சேர்ந்தவர் கிருஷ்ணா (52). இவர், சில ஆண்டுகளுக்கு முன் பணிக்காரணமாக அமெரிக்காவில் நிரந்திர குடியுரிமையுடன் குடியேறினார். இவரது தந்தை உடல் நிலை சரியில்லாத காரணத்தால், கடந்த 7ம் தேதி அமெரிக்காவில் இருந்து சென்னை வந்தார். கிருஷ்ணா, கடந்த 10ம் தேதி இரவு 11 மணி அளவில் தி.நகர் வடக்கு போக் சாலையில் உள்ள ஓட்டல் ஒன்றில் மது அருந்திவிட்டு நடந்தே வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது காரில் வந்த 3 பேர் முகவரி கேட்பது போல் நடித்து, கிருஷ்ணாவை காரில் கடத்தி சென்றுள்ளனர். அப்போது காரில் இருந்த 3 பேர் கிருஷ்ணாவை கடுமையாக தாக்கி அவரின் ஏடிஎம் கார்டு மூலம் தாம்பரம் அருகே உள்ள ஏடிஎம் மையங்களில் பணத்தை எடுக்க முயன்றனர். அமெரிக்கா வங்கி ஏடிஎம் கார்டு என்பதால் சென்னையில் பணம் எடுக்க முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் கிருஷ்ணாவை மீண்டும் உதைத்து அவர் வைத்திருந்த 600, அமெரிக்கா நிரந்தர குடியுரிமைக்கான பச்சை நிற கார்டு, ஏடிஎம் கார்டுகள், 2 விலை உயர்ந்த செல்போன்களை பிடிங்கி கொண்டு காரில் இருந்து இறக்கிவிட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். கிருஷ்ணா சம்பவம் குறித்து மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வடக்கு போக் சாலையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று கடத்திய காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தினர்.