வாஷிங்டன்: ஈ சிகிரெட்டுகளுக்கு தடை விதிக்க அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவில் சமீப காலங்களில் நாடு முழுவதும் ஈ சிகரெட் பயன்படுத்துபவர்களில் கணிசமானவருக்கு நுரையீரல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டன. இதற்கு இதுவரை 6 பேர் உயிரிழந்த நிலையில், 450க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த நிலையில், அதிபர் டிரம்ப் அவரது மனைவி மெலானியா டிரம்ப், சுகாதாரத்துறை அதிகாரிகள், உணவு மற்றும் மருந்து பொருட்கள் கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது இந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் அமெரிக்காவில் உயர்நிலைப்பள்ளி பயிலும் மாணவ, மாணவிகளில் 25 சதவீதம் பேர் ஈ சிகரெட் பயன்படுத்தியது தெரியவந்துள்ளதாக கூறப்பட்டது.