ஜம்மு-காஷ்மீரை இரண்டாக பிரிப்பதற்கு 3 பேர் கொண்ட குழுவை அமைத்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு!

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கு 3 பேர் கொண்ட குழுவை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு சட்டப்பிரிவு 370ஐ திரும்பப் பெற்ற மத்திய அரசு அம்மாநிலம் காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்படும் என்று கடந்த மாதம் 5ம் தேதி அறிவித்தது. இதனை தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது. செல்ஃபோன் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. போக்குவரத்து ஸ்தம்பித்தது. இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க 3 பேர் கொண்ட குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ராணுவ செயலாளர் சஞ்சய் மித்ரா தலைமையிலான குழுவில், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி அருண் கோயல், ஓய்வு பெற்ற ஐ.சி.ஏ.எஸ் அதிகாரி கிரிராஜ் பிரசாத் குப்தா ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இந்த குழு நிலம் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களுக்கான எல்லையை வரையறை செய்வது குறித்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளது. இந்த குழு உடனடியாக பணிகளை தொடங்கும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. அடுத்த மாதம் இறுதிக்குள் இந்த பணிகள் நிறைவடைந்து காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: