சிவகங்கையில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக பூக்குழி இறங்கி மொகரம் தினத்தை அனுசரிக்கும் இந்துக்கள்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பூக்குழி இறங்கி இந்துக்கள் மொகரம் தினத்தை கொண்டாடி வருகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன் இங்கு ஏராளமான முஸ்லீம் மக்கள் வாழ்ந்தனர். அவர்கள் கட்டிய பள்ளிவாசலே பாத்திமா பள்ளிவாசல் ஆகும். தற்போது முதுவன்திடலில் ஒரு முஸ்லீம் குடும்பம் கூட இல்லை. வேலை தேடி மதுரை, திருப்புவனம் போன்ற ஊர்களுக்கு  இடம் பெயர்ந்து விட்டனர். ஆனாலும் ஊருக்கு மத்தியில் உள்ள பாத்திமா பள்ளிவாசலை கிராமத்திலுள்ள இந்து மக்கள் நன்கு பராமரித்தும், வழிபட்டும் வருகின்றனர். இங்குள்ள இந்து மக்கள் பாத்திமாவை தேவதையாகவும், தங்களின் இஷ்ட தெய்வமாகவும் வழிபட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து விதை நெல், அறுவடை செய்த முதல் நெல், விளைந்த காய்கறிகள், கரும்பு, வாழை என அனைத்தையும் பள்ளி வாசலில் வைத்து வழிபட்ட பின்னரே உபயோகப்படுத்துகின்றனர்.

இந்நிலையில் ஆண்டுதோறும் மொகரம் தினத்தை முதுவன் திடல் கிராம மக்கள் அனுசரித்து வருகின்றனர். பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே அப்பகுதி இளைஞர்கள் காப்பு கட்டி விரதம் இருக்கின்றனர். இதனையடுத்து பாத்திமா பள்ளி வாசலுக்கு முன்பாகவே அகலமான குழி வெட்டி பூக்குழி தயார் செய்து ஆண்கள் நெருப்பில் வரிசையாக இறங்கியும், பெண்கள் முக்காடு போட்டு அமர்ந்து கொண்டு தலையின் மீது நெருப்பை அள்ளி கொட்ட செய்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். இந்த நிகழ்வை பற்றி கேள்விப்பட்டு சுற்றுவட்டார பகுதியில் உள்ள முஸ்லீம் மக்களும் வந்து இந்நிகழ்வை பார்வையிட்டு செல்கின்றனர்.

Related Stories: