வேளச்சேரி: சென்னை டி.பி. சத்திரம், குடிசைமாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் பென்னிராஜ் (20). இவர் நேற்று முன்தினம் மாலை தனது தாய் அமுலு மற்றும் இவரது நண்பர்கள் சதீஷ்குமார், ஷியாம்குமார் ஆகியோருடன் பெசன்ட் நகர் வேளாங்கண்ணி கோயில் தேர் திருவிழாவில் கலந்துகொள்ள சென்றார்.அங்கு, இரவு 11.30 மணியளவில் நண்பர்களுடன் சேர்ந்து ராட்டினம் விளையாடிவிட்டு வருவதாக தாயிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த வாலிபர்கள் சிலருடன் ஏற்பட்ட தகராறில் பென்னிராஜ் வெட்டி கொலை செய்யப்பட்டார்.தகவலறிந்து வந்த போலீசார், பென்னிராஜ் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சாஸ்திரி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த வீரகுமார் (26), தீபக் (21), அருண்குமார் (20), முத்துக்குமார் (25), சக்திவேல் (25), சதீஷ் (எ) சகாபுதீன் (20), சாமுவேல் (20), சாம்சன் (23), விஜய் (22) உள்பட 9 பேர், பென்னிகுமாரை கொலை செய்தது தெரிந்தது. தலைமறைவாக இருந்த அவர்களை நேற்று போலீசார் கைது செய்தனர்.