அழிவை தடுக்க ஆவின் நிறுவனத்தை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கண்காணிக்க வேண்டும்: பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை

சென்னை: ஆவின் நிறுவனத்தின் அழிவை தடுத்து நிறுத்த முதல்வர், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளனர். ஆவின் முகவர்கள் சங்கத்தினர் முதல்வருக்கு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஆவின் பால் விற்பனைக்கான கமிஷன் தொகையை லிட்டருக்கு 50பைசா உயர்த்தி ஆவின் பாலிற்கான மொத்த கமிஷன் தொகை லிட்டருக்கு ₹2 எனவும், அந்த தொகை மொத்த விநியோகஸ்தர்களுக்கும் மற்றும் சில்லரை வணிகர்களுக்கும்   என குறிப்பிட்டு பொதுமக்களுக்கு ஆவின் பாலினை தங்குதடையின்றி விநியோகம் செய்யும் பால் முகவர்களை புறக்கணித்து உயரதிகாரி உத்தரவிட்டுள்ளார்.தற்போதுள்ள 65 மொத்த விநியோகஸ்தர்களில் பெரும்பாலானவர்கள்  உயர்த்தப்பட்டுள்ள 50பைசா கமிஷன் தொகையில் 15பைசா முதல் 25பைசா வரை ஆவின் அதிகாரிகளுக்கும், அமைச்சருக்கும் லஞ்சமாக கொடுக்க வேண்டியதிருப்பதால் அதனை உங்களுக்கு தர முடியாது என உயர்த்தப்பட்ட கமிஷன்  தொகையை பால் முகவர்களுக்கு தர மறுத்து வருகின்றனர்.  

அதுமட்டுமின்றி தற்போதுள்ள 65 மொத்த விநியோகஸ்தர்களில் ஆவின் அதிகாரிகளின் பேச்சிற்கு கட்டுப்பட்டு, அவர்களுக்கு சாதகமாக செயல்படுவோருக்கு மட்டுமே மொத்த விநியோக உரிமை எனவும், அதற்கு  50லட்சம் முன் வைப்புத்  தொகையோடு எதிர் கேள்வி கேட்காமல் சுமார் 20லட்சம் வரை கப்பம் கட்ட தயாராக இருக்கும் 10பேரை மட்டும் தேர்வு செய்து விட்டு மீதமுள்ள விநியோகஸ்தர்களை ரத்து செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.எனவே முதல்வர் தலையிட்டு ஆவின் நிறுவனத்தின் அழிவுப் பயணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஆவின் உயரதிகாரிகளை தீவிரமாக கண்காணித்து கடுமையாக நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று கூறினர்.

Related Stories: