நியூயார்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், 19 வயது இளம் வீராங்கனை பியான்கா ஆண்ட்ரீஸ்கு (கனடா) முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.பரபரப்பான இறுதிப் போட்டியில் அமெரிக்க நட்சத்திரம் செரீனா வில்லியம்சுடன் (37 வயது) மோதிய பியான்கா 6-3 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் செரீனா கடும் நெருக்கடி கொடுத்த நிலையில், பதற்றமின்றி இயல்பான ஆட்டதை வெளிப்படுத்திய பியான்கா 6-3, 7-5 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தி யுஎஸ் ஓபன் கோப்பையை முத்தமிட்டார்.இப்போட்டி 1 மணி, 40 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. இந்த வெற்றியின் மூலமாக, கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் கனடா வீராங்கனை என்ற சாதனை பியான்கா வசமானது. 24வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்லும் கனவுடன் களமிறங்கிய செரீனா கடுமையாகப் போராடினாலும், இளம் வீராங்கனையின் அதிரடி ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் 2வது இடத்துடன் திருப்தி அடைந்தார்.