மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா : நாளை சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம்

மதுரை: ஆவணி மூலத் திருவிழாவை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று ‘பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை’ நடந்தது. நாளை சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழாவில் நேற்று உலவாக்கோட்டை அருளிய திருவிளையாடல் நடைபெற்றது. இன்று காலை 10 மணிக்கு கோயில் மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் பாணனுக்கு அங்கம் வெட்டிய திருவிளையாடல் நடந்தது. பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை குறித்த வரலாற்றினை மீனாட்சி கோயில் பட்டர்கள் கூறுகையில், ‘‘குலோத்துங்க பாண்டியன் காலத்தில் பாணன் என்ற வயது முதிர்ந்த வாள்வித்தை ஆசிரியர் வாழ்ந்து வந்தார்.

அவரது சிஷ்யர்களில் சித்தன் என்னும் ஒருவன் மிகவும் தீய குணங்கள் கொண்டவன். பயிற்சி முடித்து சென்ற அவன், தானும் ஒரு பயிற்சி பள்ளி அமைத்து ஆசிரியரின் மாணவர்களையெல்லாம் அங்கு அழைத்துக் கொண்டான் அத்தோடு ஆசிரியர் பாணனின் மனைவியிடமும் தவறாக நடக்க முயற்சித்தான். மனம் வருந்திய பாணனின் மனைவி, இறைவன் சோமசுந்தரரிடம் அழுது முறையிட்டார். இறைவனும் ஆசிரியர் வேடம் தாங்கிச் சென்று சித்தனை வாட்போருக்கு அழைத்து, ஆசான் மனைவியை நினைத்த நெஞ்சையும், பேசிய நாக்கையும், தொட்ட கைகளையும், கண்ட கண்களையும், காத்துக் கொள் என்று கூறி ஒவ்வொரு அங்கமாக வெட்டி, இறுதியாக அவன் தலையையும், வெட்டிக் கொன்றார்’’ என்று தெரிவித்தனர்.

இன்று மாலை 6 மணிக்கு கோயிலில் உள்ள யானை மகாலுக்கு முன்பு திருஞானசம்பந்தர் சைவ சமயத்தை நிலை நிறுத்திய வரலாறு தல ஓதுவாரால் சொல்லப்படுகிறது. தொடர்ந்து சுவாமி மற்றும் பிரியாவிடை தங்க ரிஷப வாகனத்திலும், அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி ஆவணி மூல வீதிகளில் வலம் வருகின்றனர். நாளை வளையல் விற்ற திருவிளையாடலை தொடர்ந்து இரவு 7.35 மணியளவில் சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.

Related Stories: