சென்னை: சென்னை விமான நிலையத்தில் மூன்று விமானங்களில் ₹52.5 லட்சம் மதிப்புடைய தங்கம், குங்குமப்பூ, ஐபோன், கைக்கடிகாரங்கள், வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். சிங்கப்பூரில் இருந்து ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் ராமநாதபுரத்தை சேர்ந்த ராவுத்தர் நயினா (25), பாக்கர் முகமது (24) ஆகிய இரண்டு பேர் சுற்றுலா பயணியாக சிங்கப்பூர் சென்று விட்டு திரும்பி வந்தனர். அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. தனியறைக்கு அழைத்துச்சென்று சோதித்தபோது அவர்களது உள்ளாடையில் தலா 300 கிராம் வீதம் 600 கிராம் தங்க கட்டிகள் வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர், இந்நிலையில் இலங்கையில் இருந்து லங்கன் விமானம் நேற்று அதிகாலை 2.45 மணிக்கு சென்னை வந்தது. அதில் ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது அப்துல் (25) வந்தார்.