தாம்பரம்: மழைநீர் சேகரிப்பு குறித்த மாநில அளவிலான ஆய்வு கூட்டம், ரிப்பன் மாளிகையில் கடந்த 19ம் தேதி நடந்தது. இதில், மாநகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் வாரியம், பேரூராட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் பங்கேற்றனர். அப்போது, அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை விரைந்து அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் வேலுமணி உத்தரவிட்டார்.அதன்பேரில் தாம்பரம் நகராட்சியில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு ஏற்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம், நகராட்சி அலுவலகத்தில், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கருப்பைய ராஜா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் நகராட்சியில் உள்ள அனைத்து கட்டிங்களிலும், மழைநீர் சேகரிப்பு முறையினை தவறாமல் கண்டிப்பாக அமைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொரு வீடு, கட்டிடங்களிலும் நேராய்வு செய்து மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த நகராட்சியின் டி.சி.பி. மற்றும் அனிமேட்டர்ஸ் பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது.அதற்கான படிவங்கள் தங்களின் மேற்பார்வையாளர்களிடம் பெற்று ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 50 கட்டிடங்களில் நேராய்வு செய்து அறிக்கை சமர்பிக்க வேண்டும். இந்த நடவடிக்கையை சுகாதார ஆய்வாளர்கள் நேராய்வு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.