வில்லியனூர்: கவர்னர் முட்டுக்கட்டை போடவில்லையென்றால் புதுச்சேரியை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றுவோம் என முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். புதுவை அரசின் கலை பண்பாட்டு மையம் சார்பில் இந்தியாவுடன் புதுச்சேரி இணைக்கப்பட்ட சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள கீழுர் நினைவிடத்தில் நேற்று காலை கொண்டாடப்பட்டது. இதில் முதல்வர் நாராயணசாமி கலந்துகொண்டு பேசியதாவது: பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தை எதிர்த்து புதுவை சுதந்திரம் பெற வேண்டும். இந்திய நாட்டுடன் இணைய வேண்டும் என முத்துகுமாரப்பரெட்டியார், வெங்கடசுப்பா ரெட்டியார், சுப்புராயநாயக்கர், சுப்பையா, அன்சாரி துரைசாமி ஆகியோர் அரும்பாடுபட்டனர். பல போராட்டங்களை நடத்தினர். கீழுர் பகுதியை அவர்கள் தேர்ந்தெடுத்து வாக்கெடுப்பு நடத்தினர். அப்படித்தான் நாம் சுதந்திரம் பெற்றோம். 1964 ம் ஆண்டு நாம் முழுமையாக இந்தியாவுடன் இணைந்தோம்.