மேட்டூர்: தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் நேற்று மேட்டூர் அணை பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி:கர்நாடக, கேரள மாநிலங்களில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்ததையடுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனையடுத்து 8 ஆண்டுகளாக குறுவை சாகுபடியை இழந்த காவிரி டெல்டா விவசாயிகள் மிகுந்த நம்பிக்கையுடன் சம்பா நேரடி விதைப்பு மற்றும் நாற்று விடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 10,000ம் கனஅடி தண்ணீர் மட்டுமே விடுவிப்பதால் கல்லணைக்கு அதிகபட்சம் 5,000 கனஅடி நீரே வந்து சேரும். கல்லணையில் இருந்து காவிரி மற்றும் வெண்ணாறுகளின் முழு பாசன அளவான தலா 9,500 கனஅடியும், கல்லணை கால்வாயில் 3,000 கனஅடியும், வழியோர மாவட்டங்களில் சுமார் 2,000 கனஅடி என கூடுதலாக 24,000 கனஅடி நீர் தேவைப்படும்.