காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிப்பதற்காக காத்திருந்த 8 பக்தர்கள் மயக்கமடைந்துள்ளனர். வி.ஐ.பி தரிசன வரிசையில் பல மணி நேரமாக காத்திருந்த 8 பேர் மயக்கமடைந்தனர். மயக்கமடைந்த பக்தர்களை மீட்ட மருத்துவர்கள் மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளித்து வருகின்றனர். காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் அத்திவரதர் வைபவம் 48 நாட்கள் நடைபெறும். அத்திவரதர் வைபவம் தொடங்கி இன்றோடு 41 நாட்கள் முடிவடைந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 31ம் தேதி வரை சயன கோலத்தில் காட்சி அளித்த அத்திவரதர் இந்த மாதம் 1ம் தேதி முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். நின்ற கோலத்தில் அருள் பாலிக்கும் அத்திவரதரை வழிபட தினமும் சுமார் 3 லட்சம் பக்தர்கள் வருகின்றனர். அத்திவரதரை தரிசிக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தரிசனத்தில் புதிய கட்டுப்பாடுகளை காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் விதித்து உள்ளது.