விளைநிலங்கள் வழியாக செயல்படுத்தப்படும் திட்டங்களை மாற்று வழியில் செயல்படுத்த வேண்டும்: எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்

சென்னை:  விளைநிலங்கள் வழியாக செயல்படுத்தப்படும் திட்டங்களை மாற்று வழியில் செயல்படுத்த வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது. எஸ்.டி.பி.ஐ.கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கை: விளைநிலங்கள் வழியாக மேற்கொள்ளப்படும் கெயில் எரிவாயு குழாய் திட்டம், ஐடிபிஎல் எண்ணெய் குழாய் திட்டம் மற்றும் உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்கும் திட்டம் ஆகியவற்றை விவசாயிகளுக்கும், விளைநிலங்களுக்கும் பாதிப்பில்லாத வகையில், மாற்று வழிகள் மூலம் மத்திய அரசு செயல்படுத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி, இந்த திட்டங்களால் பாதிக்கப்பட்ட உழவர்களின் கூட்டியக்கம் சார்பாக, ஜூலை 22(இன்று), 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் தலைநகர் டெல்லியில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது. விவசாயிகளின் இந்த கோரிக்கை ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி முழு ஆதரவளிக்கிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத் தலைவர் ஷர்புதீன் அகமது மற்றும் டெல்லியை சேர்ந்த கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள். எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை சாலையோரங்கள் வழியாகவே கொண்டு செல்ல வேண்டும் என்ற தமிழக சட்டமன்ற தீர்மானத்திற்கு எதிராகவே கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டமும், ஐடிபிஎல் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டமும் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதே போல் அதி உயர் மின்னழுத்தம் கொண்ட மின்சாரத்தையும் விளைநிலங்களின் வழியாகவே உயர் மின்கோபுரங்கள் அமைத்து, விவசாயிகளின் எதிர்ப்புகளை மீறி கொண்டு செல்லப்படுகின்றது.

கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த திட்டம் சாலையோரங்களில் புதைவடம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்திலும் கேரளாவைப் போன்று இந்த திட்டத்தை புதைவடம் மூலமாக செயல்படுத்த வேண்டும். தமிழக விவசாய நிலங்களை பாழாக்கும் வகையிலான திட்டங்களை மாற்று வழியில் செயல்படுத்திட வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை முன்வைத்து, விவசாயிகள் நடத்தும் போராட்டத்தின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு, மாற்று வழியில் திட்டத்தை செயல்படுத்திட முன்வர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: