வாலாஜா: வாலாஜா அருகே போலீசார் வாகன தணிக்கையின் போது, லாரியில் கடத்தி சென்ற 1.5 டன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை டிஎஸ்பி கீதா தலைமையில், வாலாஜா போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் வாலாஜா சுங்கச்சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக சென்னை நோக்கி வேகமாக வந்த லாரியை சந்தேகத்தின் பேரில் போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசை பார்த்ததும் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு டிரைவர் தப்பியோடினார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் லாரியை சுற்றி வளைத்து அதிலிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் காட்பாடியை சேர்ந்த மகபூப்பாஷா(24), அமித்(34) மற்றும் திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலத்தை சேர்ந்த ஏழுமலை(37) என்பதும், கண்ணமங்கலத்தில் இருந்து செம்மரக்கட்டைகளை சென்னைக்கு கடத்திச் சென்றதும் தெரியவந்தது.தொடர்ந்து, லாரி மற்றும் அதில் இருந்த 1.50 டன் எடை கொண்ட 300 செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து மகபூப்பாஷா உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர். தப்பியோடிய டிரைவரை தேடிவருகின்றனர்.மேலும், கண்ணமங்கலத்தில் இருந்து செம்மரக்கட்டைகளை அனுப்பிய நபர் யார்?, சென்னையில் எங்கு கொண்டு செல்லப்பட்டது. இதில் வேறு யார், யாருக்கு தொடர்பு உள்ளது? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் சோதனையில் சந்தன கட்டை பிடிபட்டது கோவையில் கடந்த சில நாட்களாக சந்தன மரங்களை வெட்டி கடத்துவது அதிகரித்து வருகிறது. இந்த கும்பலை பிடிக்க நேற்று முன்தினம் இரவு கோவையில் போலீசார் விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்டனர். வடவள்ளி ரோடு பி.என்.புதூர் அருகே நேற்று அதிகாலை 5 மணியளவில் ரோந்து சென்றபோது அவ்வழியாக வந்த காரை தடுத்து நிறுத்த முயன்றனர். நிறுத்தாமல் தப்பிச்செல்ல முயன்றவர்களை போலீசார் விரட்டிச்சென்றபோது மடக்கினர். காரை நிறுத்திவிட்டு 3 பேர் இறங்கி ஓடி தப்பினர். காரில் இருந்த 7 சந்தனமரக் கட்டைகள், அரிவாள், 2 ரம்பம் ஆகியவற்ைற கைப்பற்றினர்.