திருவண்ணாமலை: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கழிவறையில், பிறந்து சில நிமிடங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை கிடந்தது. திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்திற்கான புதிய கட்டிடம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் காலை 6 மணியளவில் அந்த கழிவறைக்கு சென்றார். அப்போது, அங்கு குழந்தை அழுகுரல் கேட்டது. உடனடியாக மற்ற தொழிலாளர்களும் ஓடி வந்து பார்த்தனர். அங்கு துணியில் சுற்றிய நிலையில், பிறந்து சில நிமிடங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை, ரத்தத்துடன் வீசப்பட்டிருப்பது தெரியவந்தது.