மேட்டுப்பாளையம்: வேறு சாதி பெண்ணை திருமணம் செய்ய முயன்றதால் தம்பியை வெட்டி கொலை செய்த அண்ணன் போலீசில் சரணடைந்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஸ்ரீரங்கராயன் ஓடை பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி கருப்பசாமி(வயது 45). இவரது மனைவி பூவாத்தாள். இவர்களுடைய மகன்கள் வினோத்(25), கனகராஜ்(22), கார்த்திக்(19) மூவரும் பாரம் தூக்கும் தொழில் செய்து வருகின்றனர். கனகராஜும் வெள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்த வர்ஷிணி பிரியா என்ற பெண்ணும் ஓராண்டாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர் என்பதால் எதிர்ப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அந்த இளம்பெண் மீண்டும் காதலன் வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் கனகராஜின் குடும்பத்தில் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவருடைய தந்தை கருப்பசாமி, தன்னுடைய மகன் கனகராஜிடம், காதலியை வாடகைக்கு வீடு பார்த்து குடியேறுமாறும், பிரச்சினை தீர்ந்த பின்னர் திருமணம் செய்து வைப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் கனகராஜ், காதலியை அழைத்துக்கொண்டு அதே பகுதியில் ஒரு வாடகை வீட்டுக்கு சென்று விட்டார்.