குஜிலியம்பாறை: குஜிலியம்பாறையில் விரிசலுடன் உள்ள ஆதிதிராவிடர் விடுதி கட்டிடத்தால் மாணவர்கள் தங்கி படிக்க அச்சப்படுகின்றனர். குஜிலியம்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த 1993ம் ஆண்டு அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதி கட்டப்பட்டது. இதில் வார்டன், தலைமை சமையலர், உதவி சமையலர் என 3 பேர் பணிபுரிகின்றனர். தரைதளம், மேல்தளத்துடன் விடுதி செயல்பட்டு வருகிறது. விடுதி துவங்கிய சில ஆண்டுகள் வரை மாணவர்கள் அதிகளவில் தங்கி படித்து வந்தனர். நாளைடைவில் போதிய பராமரிப்பு இல்லாததால் விடுதி கட்டிடங்கள் ஆங்காங்கே விரிசல் அடைந்தன. மேலும் கான்கிரீட் மேற்கூரைகள் பெயர்ந்தும் கம்பிகள் வெளியே தெரிந்தன. இதனால் மாணவர்கள் தங்கி படிக்க அச்சப்பட்டதால் எண்ணிக்கை குறைய துவங்கியது. தற்போது கரிக்காலி, பிறப்பகவுண்டன்பட்டி, கூட்டக்காரன்பட்டி, கவுண்டனூர், சி.அம்மாபட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த 32 ஆதிதிராவிட மாணவர்கள் இந்த விடுதியில் தங்கி குஜிலியம்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் படிப்பதற்கு சேர்ந்துள்ளனர். ஆனால் பயமுறுத்தும் விடுதி கட்டிடத்தால் தங்கி படிக்க முடியாமல் காலை, மதியம், மாலை என 3 வேளைகள் மட்டும் சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு சென்று விடுகின்றனர்.