மும்பை: ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியாக கருதப்படும் தாராவி, 2019ம் ஆண்டின் சுற்றுலாப் பயணிகள், இந்தியாவில் விரும்பி பார்க்கும் இடமாக மாறியிருக்கிறது. உலக அதிசயமான தாஜ் மஹாலையும் அது தோற்கடித்துவிட்டது. இந்தியாவில் சுற்றுலாப் பயணிகள் விரும்பி பார்க்கும் இடங்களின் பட்டியலை ‘டிரிப் அட்வைசர்ஸ் டிராவலர்ஸ்’ என்ற சர்வதேச அமைப்பு சமீபத்தில் வெளியிட்டது. இந்தியாவில் சுற்றுலாப் பயணிகள் எங்கெங்கு செல்ல விரும்புகிறார்கள் என்பது இந்த பட்டியலில் உள்ளது. இதில் ‘ஸ்மால் குரூப் டூர் டு தாராவி இன் மும்பை’ இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதேபோல ஆசியாவில் 2019ம் ஆண்டின் சுற்றுலாப் பயணிகள் விரும்பி பார்க்கும் முதல் 10 இடங்கள் பட்டியலிலும் தாராவி குடிசைப் பகுதி இடம் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் தாஜ் மஹாலின் பெயரே இல்லை. இந்தியாவில் சுற்றுலாப் பயணிகள் விரும்பி பார்க்கும் இடங்களில் தாராவிக்கு அடுத்த படியாக ‘பைக் டூர் ஆப் ஓல்டு டெல்லி’ இரண்டாவது இடத்திலும் ‘சூப்பர் பாஸ்ட் ரயில் மூலமான தாஜ் மஹால் மற்றும் ஆக்ரா கோட்டை டூர்’ மூன்றாவது இடத்திலும் உள்ளன.