பாலியல் பலாத்கார முயற்சியில் 9 மாத குழந்தை கொலை: கொடூர ஆசாமிக்கு சரமாரி அடி, உதை

திருமலை: ஒன்பது மாத பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று கொலை செய்த ஆசாமியை பொதுமக்கள் சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தெலங்கானா மாநிலம், ஐதராபாத் அனுகொண்டாவில் டெய்லர் தெருவில் தாபா நடத்தி வருபவர்  ஜெகன். இவரது மனைவி அர்ச்சனா. இவர்கள் நேற்றுமுன்தினம் இரவு தாபாவின் மாடியில் தங்களது 9 மாத குழந்தை சிரிதாவுடன் தூங்கினர். நள்ளிரவு 1 மணியளவில் பார்த்த அர்ச்சனா அருகில் படுத்திருந்த குழந்தையை காணாமல் அதிர்ச்சியடைந்தார். பின்னர் கணவன், மனைவி இருவரும் குழந்தையை பல இடங்களில் தேடினர். அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. இதையடுத்து இருவரும் அங்கு  விரைந்து சென்று பார்த்தனர்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பிரவீன் என்பவர், குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். குழந்தையின் பெற்றோரை பார்த்த அவர் தப்பி ஓடினார். இதற்கிடையே குழந்தையை மீட்ட பெற்றோர் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதற்கிடையில் சத்தம் கேட்டு அங்கு வந்த அப்பகுதி மக்கள், தப்பி ஓடிய பிரவீனை விரட்டிச்சென்று பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் அனுமகொண்டா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்து பிரவீனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: