உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே ரெங்கசாமிபட்டி விலக்கில் நேற்று ஷேர் ஆட்டோவில் ஏறி மாணவ, மாணவிகள் சிலர், உசிலம்பட்டியில் உள்ள பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது உசிலம்பட்டியில் இருந்து எழுமலை நோக்கி சென்ற லாரி, ஷேர் ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில், மாணவிகள் மகாலெட்சுமி(17), அர்ச்சுனா(17), ராசிகா(14), சாந்தினி(15), சோபிகா(16) மற்றும் மாணவர்கள் பிரகாஷ்(13), சஞ்சாய்(12), தெட்சிணாமூர்த்தி(14) உள்ளிட்ட 9 பேர் படுகாயமடைந்தனர். உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் மாணவ,மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர். பெற்றோர்கள் வராத நிலையில் சி.டி.ஸ்கேன் எடுக்க சென்றபோது ரூ.500 பணம் கொடுத்தால் மட்டுமே ஸ்கேன் எடுக்க முடியும் என ஒரு ஊழியர் கூறியுள்ளார். இதனால் பார்வையாளரே ரூ500 கொடுத்து சி.டி.ஸ்கேன் எடுக்க செய்துள்ளனர். பின்னர் அங்கு வந்த பெற்றோர், பணம் கொடுத்தால் தான் சி.டி.ஸ்கேன் எடுக்க முடியும் என்கிறீர்களே, உயிரை திரும்ப கொடுக்க முடியுமா என கதறி அழுதனர். விபத்து குறித்து உசிலம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.