ஐதராபாத்: தெலங்கானாவிற்கு புதிதாக தலைமை செயலகம் கட்டுவதற்கு நாளை மறுதினம் முதல்வர் சந்திரசேகர ராவ் அடிக்கல் நாட்டுகிறார். ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் கடந்த 2014ம் ஆண்டு இரண்டாக பிரிக்கப்பட்டு தெலங்கானா மாநிலம் உருவானது. ஆந்திர மாநிலத்துக்கு அமராவதியில் பிரமாண்ட தலைமை செயலகம் கட்டப்பட்டு வருகிறது. இருப்பினும், ஐதராபாத்தில் பழைய தலைமை செயலக வளாகத்தில் உள்ள குறிப்பிட்ட சில கட்டிடங்களை ஆந்திர அரசு பயன்படுத்தி வந்தது. இந்த கட்டிடங்களை தெலங்கானா அரசிடம் ஒப்படைக்கும்படி சமீபத்தில் ஆளுநர் உத்தரவிட்டு இருந்தார். இதனைத் தொடர்ந்து ஆந்திர அரசால் பயன்படுத்தப்பட்டு வந்த கட்டிடங்களில் உள்ள அலுவலகங்கள் மாற்றப்பட்டு வருகின்றன. இன்று தெலங்கானா அரசிடம் இந்த கட்டிடங்கள் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.