வட இந்திய பெண் உருவில் வடிவமைத்துள்ள தமிழன்னை சிலையை மாற்றி அமைக்கக்கோரி போராட்டம் : 110 பேர் கைது

மதுரை: மதுரையில் உலக தமிழ் சங்க வளாகத்தில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ₹16 கோடி மதிப்பில் தமிழன்னை சிலை, தமிழ் மரபு படிமங்களும் நிறுவப்படும் என அரசு அறிவித்தது. சிலை கல் மற்றும் வெண்கலத்தால் வடிவமைக்கப்படாமல் நார்ப்பொருட்கள், பளிங்கு  கண்ணாடி போன்றவற்றால் செய்யப்பட இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதற்கிடையில் தமிழன்னை சிலை வட இந்திய பெண் வடிவத்தில் அமைக்கப்பட்டதாக கூறி, தமிழறிஞர்கள், ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். எனவே, வடிவமைக்கப்பட்ட தமிழன்னை சிலையை கைவிட வேண்டும். தமிழ் முறைப்படி உரிய வல்லுநர்களிடம் ஆலோசித்து, தமிழ் சிற்பக்கலைஞர்களை கொண்டு சிலையை வடிவமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ் தேசிய பேரியக்கம், வீரத்தமிழர் முன்னணி உள்ளிட்ட தமிழ் அமைப்பினர், நேற்று மதுரை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

இதற்காக அவர்கள் அண்ணா பஸ் ஸ்டாண்ட், திருவள்ளுவர் சிலை அருகிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கலெக்டர் அலுவலகத்தை நோக்கி வந்தனர். அவர்களை கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைய விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் தமிழ் அமைப்பினர் அப்பகுதியில் அரசை கண்டித்து கோஷமிட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால், போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் தேசிய பேரியக்க தலைவர் மணியரசன் மற்றும் 15 பெண்கள் உள்பட 110 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: