சதுரகிரி மலையில் இரவில் தங்கிய நியூசிலாந்து நபர்: அலட்சியமாக அனுப்பிய போலீசார்

வத்திராயிருப்பு: சதுரகிரி மலையில் ஆய்வு என்ற பெயரில் நியூசிலாந்து நாட்டை சேர்ந்தவர் இரவு முழுவதும் தங்கியிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும்  பெயரளவுக்கு விசாரணை நடத்தி, போலீசார் அவரை அனுப்பி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. பிரதோஷத்தை முன்னிட்டு கடந்த 13ம் தேதி முதல் மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலை நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சந்திரசேகரராம் (51) என்பவர் மலை ஏறினார். இரவு முழுவதும் மலையில் தங்கிய அவர் நேற்று காலை கீழே இறங்கினார்.

இவர் தாணிப்பாறை கேட்டில் டோக்கன் மட்டும் வாங்கிவிட்டு மலை ஏறியதாகவும், வனத்துறையிடம் உரிய அனுமதி வாங்கவில்லை என்றும் தகவல் கிடைத்தது. இதையடுத்து அடிவாரத்தில் இருந்த போலீசார் அவரிடம் விசாரித்தனர். அப்போது, நியூசிலாந்து நாட்டில் இருந்து வருவதாகவும், ஆய்வுக்காக சதுரகிரி மலைக்கு வந்ததாகவும் தெரிவித்தார். மேலும் தன்னிடம் இருந்த பாஸ்போர்ட்டை காட்டினார். அங்கிருந்த பத்திரிகை நிருபர்கள் அவரை புகைப்படம் எடுக்க முயன்றனர். ஆனால் அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

பக்தர்கள் கூறுகையில், ‘‘வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் ஆய்வு என்று கூறி இரவு முழுவதும் மலையில் தங்கியது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. சதுரகிரி மலைப்பகுதியில் இரவில் தங்க பக்தர்கள் உட்பட யாருக்கும் அனுமதி அளிக்கப்படுவதில்லை. அவர் எந்த மாதிரியான ஆய்வை மலையில் மேற்கொண்டார் என தெரியவில்லை. அவர் வனத்துறையிடம் அனுமதி பெறவில்லை. தாணிப்பாறை கேட்டில் டோக்கனை மட்டும் கொடுத்து அவரை மேலே அனுப்பியுள்ளனர். அவரிடம் முறையான விசாரணை நடத்தாமல் போலீசார் அலட்சியமாக அனுப்பி விட்டனர். அவர் நடத்திய ஆய்வு குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும்’’ என்றனர்.

பெயரில் குழப்பம்

போலீசாரிடம் அந்த நபர் தன்னுடைய பெயர் சந்திரசேகரராம் என்று தெரிவித்துள்ளார். அதற்கு ஆதாரமாக பாஸ்போர்ட்டையும் காட்டியுள்ளார். ஆனால் அவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கிடையாது. நியூசிலாந்தை சேர்ந்தவர். அவருக்கு எப்படி சந்திரசேகரராம் என்ற பெயர் இருக்க முடியும் என்பது குறித்து போலீசார் விசாரிக்கவில்லை. அவர் தனது இயற்பெயரை மாற்றி விட்டு, சந்திரசேகரராம் என்று பெயர் வைத்துக் கொண்டிருக்கலாம் என்று தெரிகிறது. இந்த குழப்பம் குறித்து விசாரிக்காமல் போலீசார் அவரை அனுப்பி வைத்து விட்டனர் என்று அப்பகுதி மக்களும், பக்தர்களும் குற்றம்சாட்டியுள்ளனர்.

Related Stories: