கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த மூன்றாம் குலோத்துங்க சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வுக்குழு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் கொண்டப்பநாயனப்பள்ளி நாகமலை அடிவாரத்தில் உள்ள ஏரியின் மேற்கு பக்கத்தில், புதர்களுக்கிடையே டிரைவர் பால்ராஜ் என்பவர் காண்பித்த இடத்தில், இரண்டு சதுர அடி உள்ள கல் ஒன்றை கண்டெடுத்துள்ளனர். இதனை வரலாற்று ஆய்வாளர் சுகவன முருகன் மற்றும் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் ஆகியோர் அங்கேயே படியெடுத்து விளக்கம் அளித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: சோழப்பேரரசின் மூன்றாம் குலோத்துங்கன் 21வது ஆட்சி காலத்தில் ஆதிகை மான் விடுகாதழகிய பெருமாள் ஆண்ட காலத்தில், திருவெண்காட்டில் உடைய அம்பாளுக்கு மீனாண்டாள் மகள் தானம் அளித்ததை இக்கல்வெட்டு குறிக்கிறது. இதன் மற்ற பகுதிகள் உடைந்து விட்டதால் இவை மட்டுமே தெரிய வருகிறது.