மரபுவழி, நவீன பாணி ஓவியம் மற்றும் சிற்ப கலைஞர்களுக்கு கலைச்செம்மல் விருது: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்

சென்னை: மரபுவழி, நவீன பாணி ஓவியம் மற்றும் சிற்ப கலைகளில் திறமைமிக்க கலைஞர்களுக்கு கலைச்செம்மல் விருதை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மரபுவழி, நவீன பாணி ஓவியம் மற்றும் சிற்ப கலைகளில் திறமைமிக்க கலைஞர்களுக்கு ‘கலைச் செம்மல்’ விருது வழங்கி ஊக்குவிக்கிறது. விருதாளர்களுக்கு செப்பு பட்டயம், விருது தொகை ரூ.1 லட்சம் மற்றும் பாராட்டு சான்றிதழ் ஆகியவை வழங்கி கவுரவிக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் 6 புகழ்பெற்ற கலைஞர்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.

அதன்படி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று தலைமை செயலகத்தில், கலை பண்பாட்டு துறையின் சார்பில் மரபுவழி மற்றும் நவீன பாணி ஓவியம் மற்றும் சிற்ப கலைகளில் திறமைமிக்க 6 கலைஞர்களுக்கு 2025-26ம் ஆண்டிற்கான ‘கலைச் செம்மல்’ விருதுகளை வழங்கினார். இதில், மரபுவழி ஓவிய பிரிவில் மா.பாலசுப்ரமணியன், மரபுவழி சிற்ப பிரிவில் தே.ஸ்ரீகண்ட ஸ்தபதி மற்றும் உ.பத்மநாபன், நவீனபாணி ஓவிய பிரிவில் கோ.வில்வநாதன் மற்றும் மு.ராஜா, நவீனபாணி சிற்ப பிரிவில் ச.சாந்தி ஆகியோருக்கு விருதை பெற்றனர். நிகழ்வில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் க.மணிவாசன், கலை பண்பாட்டு துறை இயக்குநர் வளர்மதி மற்றும் இணை இயக்குநர் கார்குழலி ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: