நாகர்கோவில்: ரயில்வே பணிகளில் சேர இளம்பெண்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தொழில்நுட்ப பிரிவு சார்ந்த பணிகளில் சேர தமிழகத்தில் இருந்து மட்டும் இந்த முறை 39 ஆயிரத்து 139 பேர் ரயில்வேயை நாடியுள்ளனர். ரயில்வேயில் தொழில்நுட்ப பிரிவில் அசிஸ்டென்ட் லோகோ பைலட், டெக்னீஷியன் உள்ளிட்ட பிரிவுகளில் ஆட்களை தேர்வு செய்ய ஆன்லைன் தேர்வு அண்மையில் நடைபெற்றது. வழக்கமாக ஆண்கள் அதிகம் தேர்வு செய்யகின்ற பணிகளில் தற்போது பெண்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். லோகோ பைலட் மற்றும் டெக்னீஷியன் பிரிவுகளில் விண்ணப்பித்தவர்கள் பெண்கள் மொத்தம் 4.75 லட்சம் ஆகும். இவர்களில் தமிழகத்தில் இருந்து 39 ஆயிரத்து 139 பெண்கள் போட்டியில் உள்ளனர். அதிகப்படியாக விண்ணப்பித்துள்ள பெண்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இங்கிருந்து 72 ஆயிரத்து 817 ெபண்கள் விண்ணப்பித்துள்ளனர். மொத்த விண்ணப்பதாரர்களில் 42.82 லட்சம் பேர் ஆண்கள் ஆவர். மேலும் திருநங்கைகள் 98 பேர் விண்ணப்பித்துள்ளனர். உச்சநீதிமன்ற உத்தரவு அடிப்படையில் முதன் முதலாக ரயில்வேயில் திருநங்கைகள் ரயில்வே பணிகளுக்கு அனுமதிக்கப்பட இருக்கின்றனர். இதனை போன்று ரயில்வே பணிகளுக்கு அதிகபட்ச பெண்கள் விண்ணப்பித்ததும் இதுவே முதல்முறை ஆகும்.