விஜயவாடா: இசட் பிளஸ் பாதுகாப்பு உள்ள நிலையில், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு விஐபி அந்தஸ்து வழங்க மறுக்கப்பட்டதோடு, விமான நிலையத்தில் சாதாரண பயணிகளை போல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, விமானத்தில் செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு விஜயவாடா விமான நிலையத்திற்கு வந்தார். தற்போது மாநில எதிர்க்கட்சி தலைவராக உள்ள அவருக்கு முக்கிய பிரமுகர்களுக்கு அளிக்கப்படும் இசட் பிளஸ் பாதுகாப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதனால் சந்திரபாபு நாயுடு விஐபி.க்கள் வாகனத்தில் ஏறி விமானத்துக்கு செல்ல முயன்றார். ஆனால், பாதுகாப்பு படை வீரர்கள் அவரை விஐபி வாகனத்தில் ஏற அனுமதி மறுத்தனர். மேலும், சாதாரண பயணிகளை போல் வரிசையிலும் செல்லுமாறு அறிவுறுத்தினர். மேலும் உடமைகளை சோதனையிட ஒத்துழைக்கும்படியும் அவர் கேட்டுக் கொள்ளப்பட்டார். இதனால், அதிர்ச்சியடைந்த சந்திரபாபு நாயுடு தனது காரில் இருந்து இறங்கி விமான நிலையத்துக்கு வரிசையில் சென்றார்.