பெரியகுளம்: பெரியகுளம் அருகே இருபிரிவினரிடையே மோதலையடுத்து மறியல் போராட்டத்தின்போது நடந்த கல்வீச்சில் எஸ்பி பாஸ்கரன் உள்பட 15 போலீசார் படுகாயமடைந்தனர். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் முரளி. எலக்ட்ரிகல் கடை நடத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன் இவரது கடை அருகே சருத்துப்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் ரஞ்சித், டூவீலரில் வேகமாக சென்றார். இதை முரளி கண்டித்தார். ஆத்திரமடைந்த ரஞ்சித் மற்றும் உறவினர்கள், முரளி மற்றும் அவரது மனைவி, சகோதரியை தாக்கினர். தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி லட்சுமிபுரத்தில் முரளியின் உறவினர்கள் மறியல் செய்தனர். அப்போது பெரியகுளத்தை சேர்ந்த அஜித்குமார், சுரேந்தர் மறியலை செல்போனில் படம் எடுத்தனர். அவர்களை லட்சுமிபுரத்தை சேர்ந்தவர்கள் தாக்கினர். இதனைக் கண்டித்து பெரியகுளம் தென்கரையில் மறியல் நடைபெற்றது.ரஞ்சித்தின் அக்கா கணவர் சிரஞ்சீவி தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருகிறார். அவரை பொம்மிநாயக்கன்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் லட்சுமிபுரத்தை சேர்ந்த சிலர் தாக்கினர்.