தமிழகத்தில் நீர்நிலைகளை தூர்வார ஒதுக்கிய தொகையை வாரிக்கொள்ளும் அமைச்சர்கள்: பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

ராமேஸ்வரம்:  ‘ராமேஸ்வரத்தில் நேற்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழு கூட்டம் மாநில தலைவர் சுப்ரமணி தலைமையில் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசியதாவது: தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாப்பது, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது போன்ற எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. ஆனால் இதற்காக கடந்த ஆண்டு தமிழக அரசால் ரூ.336 கோடியும், நடப்பு ஆண்டு ரூ.400 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நீர்நிலைகளை தூர்வாருவதாக கூறி ஒதுக்கப்படும் தொகையை அமைச்சர்கள் மொத்தமாக வாரிக் கொள்கின்றனர்.

தமிழகத்தில் இதுவரை எந்த குளங்களும், ஏரிகளும் தூர்வாரப்படவில்லை. இதனால் தமிழக மக்கள் குடிநீருக்காக தவித்து வருகின்றனர். காவிரி பிரச்னை, கடுமையான வறட்சி, மத்திய அரசின் உயர்கல்வி கொள்கைக்கான வரைவு திட்டம் போன்றவை குறித்து விவாதிக்க உடனடியாக சட்டமன்றத்தை கூட்ட வேண்டும். அல்லது அனைத்து கட்சி கூட்டத்தையாவது கூட்டி விவாதிக்க வேண்டும். முதல்வரின் டெல்லி பயணம் அனைத்தும் அவர்களது கட்சியின் உறவு குறித்தும், ஆட்சியை பாதுகாத்துக்கொள்வது, மத்திய அமைச்சரவையில் பதவி பெறுவதற்கு மட்டுமே பயன்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற்று வரும் மோசமான ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: