ஓமலூர்: சந்திராயன்-2 நிலவில் இறங்கி நீர் இருப்பதை உறுதி செய்யும் என அறிவியல் தொழில்நுட்பக்குழு துணைத்தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, புதிய பள்ளி துவக்க விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பக்குழு துணைத்தலைவர் மயில்சாமி அண்ணாதுரை, விமானம் மூலம் சேலம் வந்தார். அப்போது, அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:செப்டம்பர் 6ம் தேதி சந்திராயன்-2, நிலவில் இறங்கி ஆய்வுப்பணியை துவங்கும். தொழில்நுட்ப ரீதியான அடுத்தக்கட்டம் தான் சந்திராயன்-2. சந்திராயன்-1 நிலவை சுற்றி ஆய்வு செய்தது. சந்திராயன்-2 நிலவில் இறங்கும் திட்டமாகும். மேலும், மனிதர்களை நிலவில் இறக்குவதற்கான மிகப்பெரிய முயற்சி இதுவாகும். சந்திராயன் 1, நிலவில் நீர் இருப்பதை 100 கி.மீ., தொலைவில் இருந்து கண்டறிந்தது. தற்போது, சந்திராயன்-2 நிலவில் இறங்கி, நீர் இருப்பதை உறுதி செய்யும். மேலும், விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் முயற்சி படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.