லக்னோ: குஜராத்தில் புயல் பாதிப்பு உள்ள பகுதிகளில் காங்கிரஸ் தொண்டர்கள் மீட்பு பணி உள்ளிட்ட உதவிகளில் ஈடுபட வேண்டும் என ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். தென்மேற்கு பருவ மழை காரணமாக அரபிக்கடலில் உருவான வாயு புயல் நாளை குஜராத் மாநிலம் போர்பந்தர் மற்றும் மாகுவா பகுதியில் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வாயு புயல் காரணமாக குடிசை வீடுகள் மற்றும் சாதாரண வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் விவசாய பயிர்களும், சாலையில் உள்ள மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் குஜராத் மாநிலம் ஜாம் நகருக்கு மீட்பு பணிக்காக சென்றுள்ளனர்.