ஐஎம்ஏ நிறுவன முறைகேடு குறித்து சிறப்பு புலனாய்வு போலீசார் விசாரணை : முதல்வர் குமாரசாமி உத்தரவு

பெங்களூரு : ஐஎம்ஏ நிதி நிறுவன முறைகேடு குறித்து சிறப்பு புலனாய்வு போலீசார் விசாரணை  போலீசார் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் குமாரசாமி கூறினார். பெங்களூரு  சிவாஜிநகர் ஐஎம்ஏ நகைக்கடை நிர்வாகம் பெரிய அளவில் மக்களை மோசடி  செய்துள்ளது. முதலீடு செய்தால் மாதந்தோறும் 3 சதவீதம் வட்டி தருகிறோம்  என்பது உள்ளிட்ட கவர்ச்சியான விளம்பரத்தின் பயனாக பலர் இதில் முதலீடு  செய்தனர். இந்நிலையில் கடை உரிமையாளர் மன்சூர்கான்  தலைமறைவாகிவிட்டார். இதைத்தொடர்ந்து முதலீடு செய்தவர்கள் பரிதவித்து  வருகின்றனர். இது தொடர்பாக முதல்வர் குமாரசாமி நிருபர்களிடம் கூறியதாவது:

பெங்களூரு  சிவாஜிநகர் ஐஎம்ஏ நகைக்கடை மற்றும் அதன் சார்பு நிறுவனத்தில் பணம் முதலீடு  செய்தவர்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்வோம். நகைக்கடை உரிமையாளர்  மன்சூர்கானை பற்றி எந்த தகவலும் இதுவரை தெரியவில்லை. மாநகர போலீசார்  விரைவில் அவரை கண்டுபிடிப்பார்கள். அது மட்டும் இன்றி ஐஎம்ஏ நகைக்கடை  மற்றும் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த அனைவருக்கும் அவர்களின் பணத்தை  திரும்ப கிடைக்கச்செய்வோம். சிறுக சிறுக சேர்த்த பணத்தை முதலீடு செய்து  விட்டு தற்போது பரிதவிக்கும் மக்களின் துயர் உறுதியாக துடைக்கப்படும்.

இவ்விஷயத்தை  அரசு சாதாரணமாக எடுத்துக்கொள்ளாது. ஐஎம்ஏ நகைக்கடை மற்றும் நிதி  நிறுவனத்தில் முதலீடு செய்த அனைவருக்கும் அவர்களின் பணம் திரும்ப  கிடைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.  நிதி முறைகேடு குறித்து சிறப்பு புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தவும்  உத்தரவிட்டுள்ளேன் என்றார்.

Related Stories: