புதுடெல்லி: பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் நாட்டு வான்வெளியில் பறந்து செல்ல அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. ஜுன் 13 மற்றும் 14ம் தேதிகளில் ஷாங்காய் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, பாகிஸ்தானின் வான் எல்லை வழியாக கிர்கிஸ்தானில் உள்ள பிஸ்கேக் நகருக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ளவுள்ளார். புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் தனது நாட்டு வான்வெளியில் வெளிநாட்டு விமானங்கள் பறக்க தடை விதித்துள்ளது. புல்வாமாவில் கடந்த பிப்ரவரி மாதம் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் திடீர் தாக்குதல் நடத்தியது. அதில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை பாகிஸ்தான் நாட்டுக்குள் புகுந்து பாலக்கோட் என்னும் இடத்தில் இயங்கி வந்த பயங்கரவாத முகாம்களை அழித்தது. இந்த சம்பவத்திற்கு பிறகு பாகிஸ்தான் அரசு, தனது வான்வெளியில் வெளிநாட்டு விமானங்கள் பறக்க கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி தடை விதித்தது.