திருச்சி: அதிமுகவில் சுயநலமற்ற ஒற்றை தலைமை தேவை’ என மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.ராஜன் செல்லப்பாவை தொடர்ந்து, குன்னம் எம்.எல்.ஏ.வும் விருப்பம் தெரிவித்து வாட்ஸ்அப்பில் வீடியோ வெளியிட்டு உள்ளார். மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி படுதோல்வி அடைந்தது. இந்தநிலையில், மதுரை புறநகர் மாவட்ட செயலாளரும், வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ராஜன் செல்லப்பா நேற்றுமுன்தினம், இ.பி.எஸ், ஓ.பி.எஸ். இரட்டை தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். கட்சியை கட்டுப்பாட்டுடன் நடத்த ஒற்றை தலைமை வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்நிலையில், இன்னும் ஒரு எம்.எல்.ஏ. கட்சி தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளார். பெரம்பலூர் மாவட்ட அதிமுக செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ராமசந்திரன், ராஜன் செல்லப்பா கருத்தை ஆதரித்து வாட்ஸ்அப்பில் வீடியோ வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது: அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து மதுரை மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா கூறிய கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. அவர் சொன்னதுபோல ஒற்றை தலைமை வலிமையான, சுயநலமற்ற தலைமையாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன்.