விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளை அழைத்து செல்லும் ஸ்டெச்சரில், டைல்ஸ் கற்களை துப்புரவு பணியாளர்கள் ஏற்றிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக கலெக்டர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அரசு பொதுமருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு விருத்தாசலம், பெண்ணாடம், வேப்பூர், மங்கலம்பேட்டை, கம்மாபுரம் உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் என்எல்சி சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைப்பதற்கான கட்டிடம் கட்டுவதற்கு அஸ்திவாரம் அமைக்கும் பணிக்காக பொக்லைன் இயந்திரம் மூலம் குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. டைல்ஸ் வளாகப் பகுதியில் தோண்டி எடுக்கப்பட்ட டைல்ஸ் கற்களை, நோயாளிகளை கொண்டு செல்லும் ஸ்டெச்சரில் அடுக்கி வைத்து துப்புரவு தொழிலாளர்கள் தள்ளி சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன் அங்கிருந்த நோயாளிகள் முகம் சுளித்தனர்.