தஞ்சை: மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தஞ்சை மாநகராட்சியில் பணிகள் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு கீழ அலங்கத்தில் 2 ஆயிரம் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இன்று வரை அந்த இடத்தில் எந்த பணியும் நடக்கவில்லை. மைதானம் போல கிடக்கிறது. இப்போது அடுத்த கட்டமாக 19-வது வார்டுக்கு உட்பட்ட மேல அலங்கம், செக்கடி ஆகிய பகுதிகளில் 2 ஆயிரம் வீடுகளை இடித்து பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதியில் நேற்றுமுன்தினம் மாநகராட்சி அதிகாரிகள் வீடு வீடாக சென்று உங்களுக்கு பட்டா இருக்கிறதா என கேட்டு உள்ளனர். இங்கு வசிக்கும் யாருக்கும் வீட்டுமனை பட்டா இல்லை. ஆனால் இவர்கள் 100 வருடத்திற்கும் மேலாக வசித்து வருகிறார்கள். இதையடுத்து, மாநகராட்சிக்கான பட்டா இல்லாததால் வீடுகளை காலி செய்யுங்கள் பூங்கா அமைக்க போகிறோம் என கூறி உள்ளனர். இதைக்கேட்ட மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.