பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கு: திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேருக்கு காவல் நீட்டிப்பு

கோவை: பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகி சிறையில் உள்ள திருநாவுக்கரசு, மணிவண்ணன் உள்ளிட்ட 5 பேரின் காவலை நீடித்து கோவை கோர்ட் உத்தரவிட்டது. பொள்ளாச்சியில் மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்து படம் எடுத்து மிரட்டிய வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த சபரிராஜன் (25), சதீஸ்(28), வசந்தகுமார்(24), திருநாவுக்கரசு(27) ஆகியோர் கைது செய்யப்பட்டு. குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கு முதலில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதில் புகார் கொடுத்த பெண்ணின் சகோதரனை தாக்கிய வழக்கில் கைதான மணிவண்ணன் பாலியல் வன்கொடுமை வழக்கில் சேர்க்கப்பட்டார். இதற்கிடையே இவ்வழக்கு சிபிசிஐடியில் இருந்து சிபிஐக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் கைதான திருநாவுக்கரசு மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேருக்கு நேற்றுடன் நீதிமன்ற காவல் முடிவடைந்ததால் நேற்று முன்தினம் மாலை வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கோவை சிஜேஎம் கோர்ட்டில் நீதிபதி நாகராஜ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதில் திருநாவுக்கரசு, மணிவண்ணன் உள்ளிட்ட 5 பேரின் நீதிமன்ற காவலை ஜூன் 17ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: