பொய் பிரச்சாரம் செய்து மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெற்றுள்ளார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

வயநாடு: நாட்டை பிரிவினைக்குள்ளாக்கும் சக்திகளுக்கு எதிராக போராட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கடந்த  2014ல் நடந்த மக்களவை தேர்தலில் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்த காங்கிரஸ் கட்சி, 19 சதவீத வாக்குகளுடன் வெறும் 44 இடங்களில்தான்  வெற்றி பெற்றது. தற்போது நடந்து முடிந்த 17வது நாடாளுமன்ற தேர்தலில் 8 இடங்கள் கூடுதலாக பெற்று 52 இடங்களை பெற்றிருக்கிறது.  இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்ற தேர்தலில் உத்திரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார். அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை மத்தியமைச்சர் ஸ்மிதி ராணி தோற்கடித்தார்.

ஆனால்,கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, 4 லட்சத்து 31 ஆயிரம் வாக்குகள்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மேலும் கேரளாவில் உள்ள 20 தொகுதிகளில் 19 மக்களவைத் தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கைப்பற்றி சாதனை  படைத்தது. இதையடுத்து தேர்தலில் வெற்றி பெற்ற கேரள மக்களுக்கு நன்றி தெரிவிக்க நேற்று முதல் 3 நாட்கள் ராகுல்காந்தி கேரளாவில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். முதல்நாளான நேற்று பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற திறந்த வாகனத்தில் சென்ற ராகுல்காந்தி,  வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று காலை வயநாடு ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மையத்திற்கு வந்த ராகுல் காந்தி, தொகுதி  மக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றார். பின்னர் கல்பேட்டா பகுதியில் திறந்த வேனில் பேரணியாக சென்ற ராகுல் காந்தி, வாக்களித்த  மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது பேசிய ராகுல் காந்தி, நாட்டின் பிரிவினைக்குள்ளாக்கும் சக்திகளுக்கு எதிராக நாம் போராட வேண்டும் என  குறிப்பிட்டார். மேலும் நாட்டு மக்களிடையே பொய் பிரச்சாரம் மேற்கொண்டுதான் மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெற்றதாக  குற்றம்சாட்டினார்.

Related Stories: