சென்னை: கோவையில் கேரள வாலிபரை கொலை செய்துவிட்டு சென்னையில் பதுங்கி இருந்த வாலிபரை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்தனர். சென்னையில் இரவு நேரங்களில் குற்றங்களை தடுக்கும் வகையில் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி போலீசார் தீவிர ரோந்து பணிகள் மற்றும் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், திருவல்லிக்கேணி போலீசார் நேற்று முன்தினம் இரவு தங்கள் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திருவல்லிக்கேணி ஆடம்ஸ் சாலையில் நேற்று அதிகாலை சந்தேகத்திற்கு இடமான வகையில் வாலிபர் ஒருவர் சுற்றி வந்தார். இதை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் கவியரசு, அந்த வாலிபரை அழைத்து விசாரணை நடத்த முயன்றார். ஆனால் வாலிபர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். உடனே போலீசார் அவரை துரத்தி சென்று பிடித்தனர்.