பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட, ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் தகுதி பெற்றார். பரபரப்பான அரை இறுதியில் நடப்பு சாம்பியனும் பிரெஞ்ச் ஓபனில் 11 முறை பட்டம் வென்ற சாதனையாளருமான நடால், பரம எதிரியான சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரை எதிர்கொண்டார். ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த இந்த போட்டியில், தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய நடால் 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட்களில் அபாரமாக வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இப்போட்டி 2 மணி, 25 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. பிரெஞ்ச் ஓபனில் பெடரருடன் 6 முறை மோதியுள்ள அவர் அனைத்து போட்டியிலும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 5 ஆண்டுகளில் பெடரரை அவர் முதல் முறையாக வீழ்த்தியுள்ளார். நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) - டொமினிக் தீம் (ஆஸ்திரியா) இடையே நடைபெறும் 2வது அரை இறுதியில் வெற்றி பெறும் வீரருடன் பைனலில் நடால் மோதுவார்.