அல்கார்: 10,000 ரூபாய் கடன் பிரச்சனை காரணமாக 2 வயது குழந்தை கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் பகுதியைச் சேர்ந்தவர் பன்வாரிலால் சர்மா. இவருக்கு டுவிங்கிள் சர்மா எனும் இரண்டரை வயது பெண் குழந்தை உள்ளது. கடந்த மே மாதம் 31ம் தேதி டுவிங்கிள் மாயமாகியுள்ளார். குழந்தை மாயமானதும் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். குழந்தை கடத்தப்பட்டு இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், அலிகார் மாவட்டத்தின் டாப்பல் டவுன் என்ற இடத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் நாய்களால் கடித்து குதறப்பட்ட நிலையில் பெண் குழந்தையின் உடல் கடந்த ஞாயிறன்று மீட்கப்பட்டது. அது, காணாமல் போன இரண்டரை வயது பெண் டுவிங்கிள் சர்மாவின் சடலம் என்பது உறுதி செய்யப்பட்டது. விசாரணையில் இறங்கிய போலீசார் ஜாகித், அஸ்லாம் ஆகியோரை கைது செய்தனர். குழந்தையின் தந்தையிடம் கொடுத்த கடனை கேட்டபோது, குழந்தையின் பாட்டனார் மிரட்டியதால் ஆத்திரத்தில் குழந்தையை கடத்தி கொன்றதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.