புதுடெல்லி: இந்தியாவில் கல்வி முறையை முழுவதும் சீரமைக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 2019-20ம் ஆண்டுக்கான மருத்துவ மேற்படிப்பு மற்றும் பல்மருத்துவ படிப்பு சேர்க்கையின்போது மாணவர்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர், இதனால், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர். இந்த அவல நிலையை போக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு நேற்று உச்ச நீதிமன்ற விடுமுறை கால அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதி இந்து மல்கோத்ரா, எம்ஆர்.ஷா அமர்வு தனது தீர்ப்பில் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு படிப்புகளில் மாணவர்களை சேர்க்கும் போது அவர்கள் மன அழுத்தம் அடைகின்றனர். எனவே, கல்லூரி சேர்க்கையின்போது மனஅழுத்தம் ஏற்படாதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். நாட்டின் கல்வி முறையை முழுவதும் சீரமைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.