மத்திய, மாநில அரசுகள் முழுமையாக கல்வி முறையை சீரமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: இந்தியாவில் கல்வி முறையை முழுவதும் சீரமைக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 2019-20ம் ஆண்டுக்கான மருத்துவ மேற்படிப்பு மற்றும் பல்மருத்துவ படிப்பு சேர்க்கையின்போது மாணவர்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர், இதனால், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர். இந்த அவல நிலையை போக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு நேற்று உச்ச நீதிமன்ற விடுமுறை கால அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதி இந்து மல்கோத்ரா, எம்ஆர்.ஷா அமர்வு தனது தீர்ப்பில் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு படிப்புகளில் மாணவர்களை சேர்க்கும் போது அவர்கள் மன அழுத்தம் அடைகின்றனர். எனவே, கல்லூரி சேர்க்கையின்போது மனஅழுத்தம் ஏற்படாதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். நாட்டின் கல்வி முறையை முழுவதும் சீரமைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணவர்களுக்கு ஏன் இந்த பதற்றம் மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறீர்கள்? ஏன் இத்தனை வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன?. மாணவர் சேர்க்கையின் போது ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற நிலைக்கு முழுக்க முழுக்க மகாராஷ்டிரா அரசே பொறுப்பு. எனவே, 2019-20 ஆண்டு மருத்துவ மேற்படிப்பு மற்றும் பல் மருத்துவ படிப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கான இறுதி கட்ட கவுன்சிலிங்கை ஜூன் 14ல் நடத்த வேண்டும். இவ்வாறு உத்தரவில் நீதிபதிகள் கூறினர்.

Related Stories: