நகை வாங்குவதுபோல் நடித்து நகைக்கடையில் திருடிய இளம்பெண் சிக்கினார்

சென்னை: சென்னை எம்ஜிஆர் நகர், சூளை பள்ளம், வெங்கட்ராமன் சாலையில் உள்ள நகைக்  கடையில் நேற்று முன்தினம் மாலை நகை வாங்குவது போல் நடித்து, 2 சவரன் நகைகளை அபேஸ் செய்த தேனாம்பேட்டை, எல்லையம்மன் கோயில் தெருவை சேர்ந்த சுமதி (29)  என்பவரை போலீசார் கைது செய்தனர்.

* பெரம்பூர் ராஜிவ்காந்தி நகரை சேர்ந்த பிரபல ரவுடி அப்பு (எ) அருப்பு அப்பு (25). இவர்மீது அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. அடிதடி வழக்கு தொடர்பாக ஐசிஎப் போலீசார் அப்புவை கடந்த 3 மாதமாக தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் பதுங்கி இருந்த அப்புவை போலீசார் கைது செய்தனர்.

* சூளைமேடு நமச்சிவாயபுரத்தை சேர்ந்த திருநங்கை அனிதா (21). இவரது தோழிகள் பாரதி, சாதனா. இவர்கள் மூவரும் கடந்த 31ம் தேதி நள்ளிரவு அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் ரோடு, ரயில்வே காலனி முதல் தெரு வழியாக நடந்து சென்றபோது, காரில் வந்த மர்ம நபர்கள், திடீரென திருநங்கை அனிதாவை பிடித்து, உருட்டு கட்டையால் சரமாரி தாக்கிவிட்டு தப்பினர். படுகாயமடைந்த அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. புகாரின் பேரில், அமைந்தகரை போலீசார் விசாரிக்கின்றனர்.

* சிந்தாதிரிப்பேட்டை அய்யா முதலி தெருவை சேர்ந்த லட்சுமணன் மகள் காயத்திரி (16). தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை அவரது தாய் அருகில் உள்ள கடைக்கு அழைத்துள்ளார். அதற்கு காயத்திரி கடைக்கு வர முடியாது என தாயுடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் வீட்டில் உள்ள மின் விசிறியில் காயத்திரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

* மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளி பகுதியில் இரவு நேரங்களில் கடற்கரையிலிருந்து மணல் திருடி, ஆற்று மணல் என விற்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories: