திருவனந்தபுரம் வணிக வளாக கட்டிடத்தில் திடீர் தீ விபத்து: ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

திருவனந்தபுரம்: கேரளமாநிலம் திருவனந்தபுரத்தின் கிழக்கு கோட்டைப் பகுதியின் வணிக வளாக கட்டிடம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியே புகை மண்டலம் போல் காட்சி அளித்தது. எம் ஜி சாலையில் தனியாருக்கு சொந்தமான வணிக வளாகத்தின் குடோனில் தீ விபத்து நிகழ்ந்துள்ளது. தீ மளமளவென வணிக வளாகத்திலும் பரவியதால் அப்பகுதியை புகை மண்டலம் சூழ்ந்தது. திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அனுப்பப்பட்ட 32 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 200 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

28 வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்டநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.  இருப்பினும் குடோன் மற்றும் கடைகளில் இருந்த சுமார் 1 கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகின.  தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலைமை தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த தீ விபத்துக்கான காரணத்தை அறிய இன்னும் முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மக்கள் அதிகம் நடமாடும் சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: