புதுடெல்லி: இதுவரை நடந்த பொதுத் தேர்தல்களில் 17வது மக்களவைத் தேர்தலில்தான் அதிகபட்சமாக 67.11 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு கடந்த 19ம் தேதியுடன் முடிவடைந்தது. வாக்குகள் நாளை மறுநாள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், 7 கட்ட தேர்தலில் எவ்வளவு வாக்குகள் பதிவானது என்பது பற்றி தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டது. அதில் கடந்த திங்கள்கிழமை நிலவரப்படி, இதுவரை நடந்த மக்களவைத் தேர்தல்களில், இந்த தேர்தலில்தான் அதிகபட்சமாக 67.11 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு 66.40 சதவீத வாக்குகள் பதிவானது. கடந்த 2009ம் ஆண்டு தேர்தலில் வாக்குப்பதிவு 56.9 சதவீதமாக இருந்தது.