திருவாரூர்: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் தேவாரம் பாடிய சிவனடியார் தாழ்த்தப்பட்டவர் என்பதால் கோயிலிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் கோயில் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றார். திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக இருந்து வரும் தியாகராஜசுவாமி கோயில் சைவசமயத்தின் தலைமை பீடமாகவும், முக்தியளிக்கும் தலமாகவும் இருந்து வருகிறது. திருவாரூர் அருகே கிடாரங்கொண்டானை சேர்ந்த முத்தரசன் (34) என்பவர் இந்த கோயிலில் சிவத்தொண்டு செய்து வரும் நிலையில் நேற்று முன்தினம் அங்குள்ள மூலவரான வன்மீகநாதர் சன்னதியில் அமர்ந்து தேவாரம் பாடியதாக கூறப்படுகிறது. இதனை கண்ட கோயிலின் அர்ச்சகர் ஒருவர் இந்த இடத்தில் நீ வந்து தேவாரம் பாட கூடாது என அவரை வெளியேறும்படி கூறியுள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே கோயில் ஊழியர் ஒருவர் மூலம் சிவனடியார் கோயிலை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.