வாஷிங்டன்: ஈரானுடனான போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பாக்தாத் மற்றும் எர்பில் நகர தூதரக அதிகாரிகள் உடனடியாக நாடு திரும்பும்படி அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசுகளுடன் கடந்த 2015ம் ஆண்டு அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை ஈரான் அரசு செய்து கொண்டது. இதனால், அமெரிக்காவுக்கு பயனில்லை என்று கருத்து தெரிவித்த அதிபர் டொனால்டு டிரம்ப், கடந்தாண்டு அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்தார். இது அமெரிக்கா - ஈரான் உறவில் மனக்கசப்பை ஏற்படுத்தியது. மேலும் ஈரானை தனது கருப்பு பட்டியலில் அமெரிக்கா இணைத்தது. இதையடுத்து ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தது. இதனால் ஈரானின் பொருளாதாரம் சீர்குலைந்து, இந்நிலையில், ஈரானை தன் வழிக்கு கொண்டு வரும் வகையில் போர் கப்பல்கள், போர் விமானங்கள், பேட்ரியாட் ஏவுகணை உள்ளிட்டவற்றை அமெரிக்கா மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பி வருகிறது.