கூலித் தொழிலாளி வயிற்றில் மர்மமாக புகுந்த 116 ஆணிகள்: ஒவ்வொன்றும் அரை அடி நீளமானவை

கோடா: ராஜஸ்தானில் தோட்டவேலை செய்த ஒருவரின் வயிற்றில் இருந்து 6.5 செமீ நீளம் கொண்ட 116 ஆணிகளை அறுவை சிகிச்சை மூலமாக மருத்துவர்கள் அகற்றி உள்ளனர். ராஜஸ்தானின் புண்டி பகுதியை சேர்ந்தவர் போலா சங்கர் (42). இவர், தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கடுமையான வயிற்று வலியால் அவதிக்குள்ளாகி வந்தார். பல மருத்துவர்களை சந்தித்து சிகிச்சை பெற்ற போதிலும், அவருக்கு வயிற்று வலி குணமாகவில்லை. இதைத் தொடர்ந்து, கோடாவில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்று அவர் பரிசோதனை செய்தார். அங்கு அவருக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது.

ஸ்கேனை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், சங்கரின் வயிற்றில் இரும்பு ஆணிகளின் குவியல் இருந்துள்ளது. அவருக்கு நேற்று முன்தினம் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். இதில், சங்கரின் வயிற்றுக்குள் இருந்து 116 இரும்பு ஆணிகள் எடுக்கப்பட்டது. ஒவ்வொரு ஆணியும் 6.5 செமீ நீளம் கொண்டவை.

இந்த ஆணிகள் அனைத்தும் எப்படி சங்கரின் வயிற்றுக்குள் சென்றது என்பது அவருக்கும் தெரியவில்லை. அவரது பெற்றோருக்கும் தெரியவில்லை. இது குறித்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் கூறுகையில், ‘‘இந்த ஆணிகள் சங்கரின் குடல் பகுதிகளில் குத்தியிருந்தால் நிச்சயம் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கும்,” என்றனர். இதேபோல் 2017ம் ஆண்டு புண்டியை சேர்ந்த பத்ரிலால் என்பவரின் வயிற்றில் இருந்து பரிதாபாத் மருத்துவமனை மருத்துவர்கள் 150 ஆணிகளை அகற்றியது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: