கோவை: பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் பலாத்கார வழக்கில் சபரிராஜன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனால், மேலும் சில முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என தெரிகிறது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். கடந்த மாதம் 28ம் தேதி இந்த வழக்கு, சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் கோவை, பொள்ளாச்சி பகுதிகளில் முகாமிட்டு ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் விசாரணை நடத்தினர்.